வடசென்னிமலை, திருக்கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், சேலம் ஆத்தூர் என்னும் வடசென்னிமலை என்ன்னும் குன்றின் மேல் அமைந்துள்ளது.
மூலவர் :பாலசுப்பிரமணியர்
உற்சவர் : சுப்பிரமணியர்
அம்மன் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : வசிஷ்ட தீர்த்தம்
தலச் சிறப்புகள் : கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவறக் கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம். இங்குள்ள தண்டாயுத பாணி கழுத்தில் உருத்ராட்ச மாலையுடன், தலைப்பாகை அணிந்து காட்சி தருகிறார். ஒரேசமயத்தில் முருகனின் இம்மூன்று கோலங்களையும் வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும், பவுர்ணமியில் கிரிவலம் சென்று வணங்க தீமைகள் விலகும்.
தல வரலாறு : பல்லாண்டுகளுக்கு முன்பு இக்குன்றின் அடிவாரத்தில் சில சிறுவர்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன் அவர்களுடன் விளையாட்டில் சேர்ந்துகொண்டான். சிறிது நேரம் விளையாடிய அவன், திடீரென ஒன்றும் சொல்லாமல் குன்றின் மீது வேகமாக ஏறினான். சிறுவர்களும் விளையாட்டு எண்ணத்தில் பின்தொடர்ந்தனர். ஓரிடத்தில் நின்ற அச்சிறுவன், பேரொளி தோன்ற அதன் மத்தியில் மறைந்துவிட்டான். உடன் சென்ற சிறுவர்கள், அதிர்ச்சியடைந்து ஊர்மக்களிடம் நடந்ததை கூறினர். மக்கள் வந்து பார்த்தபோது, சிறுவன் மறைந்த இடத்தில் மூன்று சுயம்பு சிலைகளும், அவ்விடத்தில் பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்தன. சிறுவனாக வந்து அருள் புரிந்தது முருகன்தான் என்றறிந்த மக்கள் இவ்விடத்தில் கோயில் கட்டினர்.
கோவில் அமைப்பு : 5 நிலைராஜ கோபுரம். தொடக்கத்தில் சுயம்புமூர்த்தி சன்னதியும், அருகில் தண்டாயுதபாணி சன்னதியும் மட்டும் இருந்தது. பக்தர் ஒருவரின் கனவில் சென்ற முருகன் இத்தலத்தில் குழந்தை வடிவாக இருக்க விரும்புவதாக கூறினாராம். அதன்பின் சுயம்புமூர்த்தி சிலைகளுக்குப் பின்பகுதியில் பாலசுப்பிரமணியராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மூன்று கோலத்தில் முருகன் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இத்தலவிநாயகர் அடிவார விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். நடுமலையில் இடும்பன் சன்னதியும், அதனருகில் நெல்லிக்கனியை முருகனுக்கு ஒளவையார் வழங்கிய காட்சியை விவரிக்கும் சிலையும் உள்ளது.
இவ்விடத்தில், பக்தர்கள் வீடு போல கற்களை குவித்து வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் வீடு கட்டும் பாக்கியம் பெறலாம் என நம்புகின்றனர். சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் அறுபது வருடங்களை குறிக்கும்படியாக படிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை. மன அமைதி வேண்டுபவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். நிலம், வீடு வாங்க விரும்புவோர் மலைப்பாதையில் உள்ள ஒளவையார் சிலை அருகில் கல் வைத்து வேண்டுகின்றனர். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. பங்குனி உத்திரத் தேர் திருவிழா நடைபெற்ற இரண்டாம் நாள் சத்தாபரம் விழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை