கஞ்சமலை,பாலமுருகன்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் , கஞ்சமலை சித்தேசுவரர் ஞானசற்குரு பாலமுருகன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், கஞ்சமலை என்னும் ஊரில் சேலத்திருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.
மூலவர் : சித்தேசுவரர்
தல தீர்த்தம் : காந்த தீர்த்த குளம்
தமிழகத்தில் பல பிரசித்தி பெற்ற கோயில்கள், சித்தர்கள் சித்தியடைந்த தலமாக இருக்கின்றன. ஆனால், சித்தரே இறைவனாக இருந்து அருள்பாலிக்கும் சிறப்பு சித்தர்கோயிலுக்கு உள்ளது.`கஞ்சமலை சித்தர்` எனப்படும் காலாங்கி நாதர், சித்தர்கோயிலில் குடிகொண்டுள்ளார்.
தலச் சிறப்புகள் : கருவறையில் இளம் யோகியின் உருவத்தில், சின்முத்திரையுடன், வீராசன நிலையில் காட்சயளிக்கிறார் சித்தேஸ்வர சுவாமி. இது சுயம்புவாகத் தோன்றியது என்றும் கூறப்படுகிறது. இக்கோயிலில், காளியம்மன், செல்வ விநாயகர் சன்னதிகளும், அருகே சிறு குன்றில் ஞான சத்குரு பாலமுருகன் சன்னதியும், கஞ்சமலையின் மீது மேல்சித்தர், காளியம்மன் , கன்னிமார் கோயிலும் உள்ளன.
கோவில் அமைப்பு : சுமார் 8000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலின் சிறப்புகள் குறித்து, திருமந்திரம், சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கரபுரநாதர் புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சமலை சித்தர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. நல்லணம்பட்டி கிழக்கிலும் சேலம் மாநகரத்திலிருந்து வடமேற்கு திசையிலும் இம்மலை அமைந்துள்ளது. சேலத்திலிருந்து இளம்பிள்ளைக்குச் செல்லும் வழியில் இந்த மலையின் அடிவாரத்தில் சித்தர் கோயில் உள்ளது. மலையின் உச்சியில் மேல்சித்தர் கோயில், கரியபெருமாள் கோயில் ஆகியன உள்ளன. சித்தர் கோயிலின் அருகில் ஒரு நீரோடை ஓடுகிறது. இந்த மலையில் காளங்கிநாதர் என்ற சித்தர் வாழ்ந்தார் என்பதற்கான குறிப்பு திருமூலர் திருமந்திரத்தில் உள்ளது. மலையின் தென்பகுதியில் சடையாண்டி ஊற்று உள்ளது. மேல்சித்தர் கோயில் அருகில் ஒரு ஊற்றும் நீரோடையும் நல்லணம்பட்டி அடிவாரத்தில் உள்ளது. இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது.
சித்தேஸ்வர் திருக்கோவில் சேலத்தில் எடப்பாடி, இளம்பிள்ளை கிராமங்கள் வழியாக சித்தர் மலை சாலையில் சென்றால், வலது பக்கத்தில் இக்கோவில் உள்ளது. வலது பக்கம் திரும்பி, உள்ளே நுழையும் போது, இடது பக்கத்தில் மலை மீதிருக்கும் முருகன் கோவில் காணப்படுகிறது. சித்தர் கோவிலின் வலது பக்கத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. எதிரே சிறிது தூரத்தில் வினாயகர் கோவில் உள்ளது. அதாவது, இக்கோவிலின் இடது பக்கத்தில் முருகன், எதிரில் கணபதி, வலது காளியம்மன் கோவில்கள் முறையே அமைந்துள்ளன.
புராதன கோவில் சிறியதாக இருக்கிறது. இதன் முன்னர் கான்கிரீட்டால் ஒரு மண்டபம் கட்டியுள்ளனர். அதற்கும் முன்னால் ஒரு சிறிய நாற்கால் மண்டபம் உள்ளது. பழைய கட்டிடம் கருங்கல் சுவருடன் காணப்படுகிறது. அச்சுவரில் உள்ள சிறிய சன்னல்கள் வழியாக பார்த்தால் உள்ளே தூண்கள் கொண்ட மண்டபம் காணப்படுகிறது. ஆனால், அது பூட்டப்பட்டுள்ளது. கோவிலின் இடது-வலது பக்கங்கள் மற்றும் கோவிலுக்கு பின்னாலும், கான்கிரிட்டால் மண்டபம் போன்று கட்டப்பட்டுள்ளது. இடது பக்க மூலையில் கிணறு இருக்கிறது. அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது. இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது. மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. “ஞானசற்குரு பால முருகன்’ என இவரை அழைக்கின்றனர். நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன
தல வரலாறு : காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர். கஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு பொன்னி நதி என்று பெயர் பெற்றது. “கஞ்சம்’ என்றால் “தாமரை’ எனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் “கஞ்சம்’ என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம். கஞ்சம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு. கஞ்சன் என்பது பிரம்மதேவனின் பெயர்களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்ததால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று கஞ்சம். மேலும் இம்மலை பிரம்மதேவனால் உண்டாக்கப்பட்டது.
காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர். அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது. “ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,” என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான். காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். “அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?” என்றார். இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார். “குருவே! நான் தான் காலாங்கி,” என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார். திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, “அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,” என்றார்.
காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார். இருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே “இளம் பிள்ளை’. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை “காலாங்கி சித்தர்’ என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து “சித்தேஸ்வரர்” என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.
திருமூலரின் சீடர் காலங்கிநாதர், அங்கு மேய வரும் பசுக்களின் மடியிலிருந்து யாருக்கும் தெரியாமல் பாலைக் குடித்து விடுவார். பசுவின் உரிமையாளர்கள் மாடு மேயக்கும் சிறுவர்களிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, ‘தங்களுடன் விளையாட வரும் இளைஞர்தான் இதற்கு காரணமாக இருக்க முடியும். மேலும், விளையாட்டின்போது அவர், எங்களை பிரம்பால் அடிக்கிறார்' என்று தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பசுக்களின் உரிமையாளர்கள் காலாங்கிநாதரைப் பிடித்து, அவரது முதுகில் ஓங்கி அடிக்கின்றனர். அவர்களது பிடியில் இருந்து தப்பி, சங்கு பூச்செடிகள் நிறைந்த புதருக்குள் புகுந்து காலாங்கிநாதர் மறைந்துவிடுகிறார். புதருக்குள் அவரைத் தேடியபோது, காலங்கிநாதர் கல் திருமேனியாக மாறியிருப்பதைக் கண்டு, தமது தவறை உணர்ந்துள்ளனர். இந்த தவறுக்கு பிராயச்சித்தமாக, ஒவ்வொரு சித்திரை மாதமும் 3-வது புதன்கிழமை, சித்தரின் முதுகில் அடித்தவர்களின் சந்ததியினர், சித்தராக வேடமணிந்து வருபவரிடம் அடிகளை வாங்கிக் கொள்கின்றனர்.
இந்த கோயில் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில் பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு இந்த குளத்து நீரால் முகம் கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள். இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.”அமாவாசை கோயில்’ என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம். பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ., சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக பகதர்கள் நம்புகின்றனர்.
சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் நேரம் முழுவதும் கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு