தோரணமலை, திருநெல்வேலி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் செல்லும் வழித்தடத்தில் தோரணமலை உள்ளது. தோரணமலை விலக்கு பகுதியில் இறங்கி, அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம். நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும்.
மூலவர் : தோரணமலை முருகன்
தல தீர்த்தம் : ராம, ஜம்பு நதி
தலச் சிறப்புகள் : முருகப்பெருமான் வீற்றிருக்கும் குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இந்த மலை பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்கி வருகிறது. முருகப்பெருமான் வீற்றிருக்கும் இந்த அருள்மலையான தோரணமலை, பார்ப்பதற்கு யானை ஒன்று உட்கார்ந்த நிலையில் துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் அமைந்திருக்கும். இத்தலத்து முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கிறது. பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அபே நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் தோரண மலைக்கும் வந்து செல்கிறார்கள். தோரணமலை முழுக்க முழுக்க வித்தியாசமானமிகுந்த தனித்துவம் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான முருகத் தலங்களில் அறுபடை வீடுகள் உள்பட எந்த ஒரு தலத்துக்கும் இல்லாத மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாக இது கருதப்படுகிறது.
கோவில் அமைப்பு : மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும். உச்சியை அடைய 926 படிகட்டுகள் ஏற வேண்டும். ஒரு காலத்தில் இந்த படிகட்டுகள் கிடையாது பாறையில் பெரும்விரலை மட்டும் ஊனும்படி ஓட்டை வடித்து வைத்திருப்பார்கள் அதன் வழியாகத் தான் ஏற வேண்டும். ஆனால் தற்போது படிக்கட்டு வழியாக ஏறிச்செல்லலாம். படிக்கட்டுகளை ஏறிச் செல்ல வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம். இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.
முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவதும், கடும் கோடையிலும் இது வற்றாமல் இருப்பது இறையருள் மட்டுமின்றி ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான். அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது. மலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. விநாயகர் கோவிலுக்கு வலதுபுறம் சுதை வடிவில் சிவபெருமான், லட்சுமி சிலைகள் உள்ளன. சப்த கன்னியர் சன்னிதி இருக்கிறது. அவர்களை வணங்கி விட்டு மலையேறினால், வழியில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை தரிசனம் செய்யலாம். மலையேற முடியாதவர்களுக்காக மலைப்பாதையின் வலதுபுறம் தனியாக முருகன் சுதையாக இருந்து அருள்பாலித்து வருகிறார், அவரை வணங்கலாம். இந்த ஆலயத்தில் வள்ளி, தெய்வானைக்கு சன்னிதி கிடையாது.
தோரணமலையின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே குழிகள் உள்ளன. மிக அழகாக வட்ட வடிவத்தில் இருக்கும் அந்த குழிகள் எல்லாம் அகத்தியர், தேரையர் கண்காணிப்பில் சித்தர்கள் மூலிகைகளை இடித்து மருந்து தயாரித்த இடங்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார். அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார். இதனால் மற்ற மகரிஷிகள், முனிவர்கள், சித்தர்களும் தோரண மலையில் இருந்து இடம்பெயர்ந்தனர். இதன் காரணமாக தோரணமலை அழகன் முருகன் ஆராதனை செய்யப்படாத நிலை ஏற்பட்டது. அகத்தியர், தேரையர்களின் மருத்துவ தயாரிப்பு இடங்களும் இருந்த இடம் தெரியாமல் தூர்ந்து போய்விட்டன. நாளடைவில் ஒட்டுமொத்த தோரணமலையும் மக்கள் கவனத்தில் இருந்து திசைமாறிப்போனது. மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் முருகன் எத்தனை நாட்களுக்குத்தான் அந்த சுனைக்குள் இருப்பார் மீண்டும் மக்கள் வந்து தன்னை தரிசித்து பயன்பெறட்டும் என்று முருகப்பெருமான் திருவுளம் கொண்டான்.
தல வரலாறு : தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்த நா.பெருமாள் என்பவர் கனவில் வேல் ஏந்திய சிறுவன் நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்” என்றான். மறுநாள் விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்றார். சுனையில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினார்கள். சொன்னபடி தோரணமலைமுருகன் அங்கே இருந்தார். அதனை குகைக்கு முன்பு வைத்து வணங்க ஆரம்பித்தனர். இன்று வரை அந்த சிலையே மூலவராக வணங்கப்படுகிறது. அபூர்வ மூலிகைகளுடன், பக்தி மணம் கமழும் தோரணமலையில் 64 சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் நோய் தீர்க்கும் அரும்பெரும் சுனையாகும். இந்த சுனைகள் அருகே சித்தர்கள் தற்போதும் தங்கி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது. கடையத்து மருமகனான பாரதியார் கடையத்தில் வாழ்ந்த போது, தோரணமலை முருகனை ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று பாடி பரவசம் அடைந்தார். தோரணமலையில் முருகப்பெருமானை வழிபட்டு சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்து வந்த தேரையர் சுமார் 700 ஆண்டு காலம் தோரணமலையில் தவமிருந்து இறுதியில் அங்கேயே ஜீவசமாதி ஆகிவிட்டார். தற்போது மூலவராக வணங்கப்படும் முருகபெருமானின் பின்புறம் தான் தேரையர் சமாதியாகும்.
அந்த சிலையை எடுத்து மலை அடி வார குகையில் இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளார். பெருமாளின் மகனும் ஆசிரியருமான ஆதிநாராயணன், தோரணமலை முருகன் பற்றிய சிறப்புகளை பரப்பச் செய்தார். இதையடுத்து மக்கள் சாரை, சாரையாக தோரணமலைக்கு வரத்தொடங்கினார்கள். பக்தர்கள் வசதிக்காக அவர் தோரணமலை உச்சிக்கு செல்ல சுமார் 1000 படிகள் கொண்ட படியை ஏற்படுத்தினார். சுனைகளையும் மேம்படுத்தினார். அதிலும் மலையில் உள்ள சுனைத்தீர்த்தம் ஏதாவது ஒன்றில் சற்று நீராடினால் போதும், கடையம், பாவூர்சத்திரம், ஆவுடையானூர் உள்பட சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலர் தவறாமல் தினமும் மலை ஏறி முருகனை வழி படுவதை கடமையாக வைத்துள்ளனர்.
தோரணமலையானது குலுக்கை மலை, ஆனைமலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இமயமலையில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தைக் காண்பதற்காக முப்பது முக்கோடி தேவர்களும், உலக மக்களும் அங்கே குவிந்தனர். இதனால் இமயமலை இருக்கும் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. பூமியின் அதிர்வால் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் நடுங்கிப்போனார்கள். தங்கள் அச்சம் குறித்து சிவபெருமானிடம் அனைவரும் எடுத்துரைத்தனர். அப்போது சிவபெருமான், குறு முனிவரான அகத்திய முனிவரை அழைத்து, ‘அகத்தியா! உலகத்தை சமநிலை பெறச் செய்ய உன்னால்தான் இயலும். ஆகவே நீ இப்போதே தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்குச் செல்’ என்று கூறினார். அகத்தியன், சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருக்குள் பெரிய வருத்தம் ஒன்று இருந்தது. அதனை ஈசனிடம் வெளிப்படுத்தவும் செய்தார். ‘ஐயனே! தங்கள் கட்டளையை மீறி நடக்க எனக்கு சக்தியில்லை.
இருப்பினும் உலகமே காண வாய்ந்திருக்கும் உங்களது திருக்கல்யாண கோலத்தை என்னால் காண இயலாமல் போகிறதே, என்பதை எண்ணி நான் மிகவும் துயரப்படுகிறேன்’ என்றார் அகத்தியர். அவரை தேற்றி ஆறுதல் படுத்திய சிவபெருமான், ‘அகத்தியா! நீ எப்போது நினைத்தாலும் நான் திருமண கோலத்தில் காட்சி தருவேன்’ என்று நல்லாசி கூறினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் தென்திசை நோக்கி பயணப்பட்டார் அகத்திய முனிவர். அவர் பொதிகை மலைக்கு வந்தபோது உலகம் சமநிலையை அடைந்தது. அகத்திய முனிவர் வந்த வழியெல்லாம் புனித பூமியானது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை அவர் திருக்குற்றாலம் வந்தார். அங்குள்ள மகாவிஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக மாற்றியது அவர்தான். அங்கிருந்து பொதிகை மலை செல்லும் போது அவரது பாதச்சுவடுகள் பட்ட இடம் தான் தோரணமலை. இந்த மலையில் அகத்தியில் சில காலம் தங்கி இருந்துள்ளார். அவரது ஆணைக்கு இணங்க, அகத்தியரின் சீடரான தேரையர் தோரணமலையிலேயே தங்கியிருந்து தவம் இயற்றி, பல சித்துக்களை செய்துள்ளார். தனது இறுதி காலத்தில் தேரையர் இங்கேயே அடங்கியதாக வரலாறு கூறுகிறது.
தேரையரே இந்த மலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் அறியப்படுகிறது. அகத்திய முனிவர் காலடி பட்டதாலும், சித்தர் ஐக்கியமானதாலும் இந்த பூமி மகத்துவம் நிறைந்ததாக போற்றப்படுகிறது. சித்தரின் அருள் அதிர்வலைகள் இப்போதும், எப்போதும் இந்த மலையில் பிரதிபலித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இது தவிர்த்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட வெங்கலவன் என்ற நாயக்க மன்னன் தோரணமலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் தகவல்கள் உள்ளன. நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கோவில் 1928–ம் ஆண்டு மீண்டும் தோற்றம் பெற்றது.
தோரணமலை கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது 11.00 மணி முதல் 1.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன. திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும். சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது. சுனையில் நீராடினாலே தங்களது நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சினை தீர, எதிரிகளின் தொல்லை அகல என பல வேண்டுதல்களோடு பக்தர்கள் முருகனை வணங்கிச் செல்கின்றனர். நினைத்த காரியங்கள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை முருகப்பெருமானுக்கு செலுத்திவிட்டு செல்கின்றனர். வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றவை வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவின் போது கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மலையடிவாரத்தில் உள்ள கோவில் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும். மலையில் உள்ள முருகன் கோயிலில் தினமும் 12.00 மணிக்கு பூஜை நடைபெறுகிறது
அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, கடையம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு